ஈரோடு, பிப். 14: ஈரோட்டில் நாகர் கோவிலில் ராகு -கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதில் பக்தர்கள் ராகு- கேதுவுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
ராகுபகவான், கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான், மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும் இடம் பெயர்ந்தார். இதனையொட்டி ஈரோடு காரைவாய்க்கால் ஸ்ரீ நாகர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடந்தது. விழாவையொட்டி காலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புன்யாஹவாஜனம், கடஸ்தானம், மூலவருக்கு யாகபூஜை ஆவாஹனம், ராகு-கேது ஸகஸ்ர நாமம், ஹோமமும் நடந்தது. இதை தொடர்ந்து 10.19 மணிக்கு கடம் தீர்த்தம், அபிஷேகம், மூலவருக்கும், ராகு-கேதுவுக்கும் பால் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ராகு-கேதுவுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். முன்னதாக, ராகு-கேது பெயர்ச்சிக்கு சிறப்பு பரிகார யாக பூஜைகளும் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மணிகண்டன், ராஜேந்திரன், பாலசுப்ரமணி, முருகன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.