தர்மபுரி, பிப்.14: தர்மபுரி மாவட்டம் ஏலகிரி அரசு பள்ளி மாணவன், அகில இந்திய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.அகில இந்திய சிலம்ப சம்மேளனம் சார்பில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியில், அகில இந்திய அளவில் சிலம்பாட்டப்போட்டி நடந்தது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து 900க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டி சீனியர், ஜூனியர், சப்ஜூனியர் உள்ளிட்ட 4 பிரிவுகளில் நடந்தது. இந்த அகில இந்திய அலவிலான சிலம்பாட்ட போட்டியில், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏலகிரி அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் நவீன்குமார் கலந்து கொண்டு, தொடுப்பள்ளி பிரிவில் தங்கப்பதக்கமும், தனித்திறமை பிரிவில் வெங்கலப்பதக்கமும் பெற்று வெற்றி பெற்றார். ஆசிய சிலம்பாட்ட போட்டிக்கு இம் மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாதனைபடைத்த நவீன்குமாரை, பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேல் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன் மற்றும் உடற்கல்வி ஆசிரியை பாலசுந்தரி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.