ஒரத்தநாடு, பிப். 14: ஒரத்தநாடு பாரதிதாசன் பல்கலைக்கழக பெண்கள் உறுப்பு கல்லூரியில் முதுகலை ஆராய்ச்சித்துறை மற்றும் சரோஜினி நாயுடு ஆங்கில இலக்கிய மன்றம் சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி முதல்வர் மலர்வழி தலைமை வகித்தார். ஆங்கில துறை தலைவர் பிரேமாவதி முன்னிலை வகித்தார். இலங்கை ஜாப்னா பல்கலைக்கழக பேராசிரியர் கருணாகரன் பங்கேற்று பேசுகையில், ஆங்கில மொழி கற்பித்தலுக்கும், பேசுவதற்கும் எளிமையான மொழி. இம்மொழியை பயமில்லாத கற்றல் என்ற இலக்கோடு பேராசிரியர்கள் கற்பிக்க முயல வேண்டும். மாணவிகளுக்கு ஆங்கிலத்தை கற்கிறோம் என்ற உணர்வின்றி சிறு சிறு இலக்கிய நயத்தோடு உரையாடி பயில வைக்க வேண்டும். மிக எளிதில் இம்முறையில் பயிற்றுவித்தால் ஆங்கிலம் எளிதில் மாணவிகளுக்கு கற்பிக்க முடியும் என்றார். தஞ்சை சரபோஜி அரசு கலை கல்லூரி துணை பேராசிரியர் மணிவண்ணன், புதுச்சேரி பல்கலைக்கழக இணை பேராசிரியர் ராஜராஜன், மன்னார்குடி ராஜகோபாலசாமி கல்லூரி பேராசிரியர் மாறன் மற்றும் பலர் பங்கேற்றனர்.