பெரிய கோயில் அகழியில் ஆக்கிரமிப்பு வீடுகள் 2ம் நாளாக இடிப்பு

தஞ்சை, பிப். 14: தஞ்சை கீழஅலங்கம் பகுதியில்  பெரிய கோயிலை சுற்றியுள்ள அகழியின் மறுகரையில் ஆக்கிரமிப்பு  செய்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடிக்கும் பணி நேற்று 2ம் நாளாக நடந்தது. தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் ரூ.1,289 கோடி மதிப்பில் நடக்கிறது. இதில் தஞ்சை மாநகரை அழகுப்படுத்துவது, சாலைகளை சீரமைப்பது, குடிநீர் வசதி மேற்கொள்வது உள்ளிட்ட 12 வகையான பணிகள் அடங்கும்.ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மேற்கொள்வதற்காக தஞ்சை மாநகரில் உள்ள அகழி பகுதியில் இருந்த வீடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக தஞ்சை பெரிய கோவில் பின்புறம் அமைந்துள்ள சேவப்பநாயக்கன்வாரி பகுதியில் உள்ள குடிசைகள் அகற்றப்பட்டன. இதன்பின்னர் தஞ்சை வடக்குவாசல் பகுதி, தஞ்சை கீழ்அலங்கத்தின் ஒரு பகுதியில் உள்ள குடிசை வீடுகள் அகற்றப்பட்டன. இவ்வாறு அகற்றப்பட்ட வீடுகளில் வசிப்பவர்களுக்கு வல்லம் அருகே பிள்ளையார்பட்டி பகுதியில் வீடுகள் வழங்கப்பட்டது.இதேபோல் தஞ்சை கீழ்அலங்கம் பகுதியில் கொடிமரத்து மூலையில் இருந்து வெள்ளைவிநாயகர் கோவில் வரை அகழியை ஒட்டியுள்ள 125 வீடுகளை இடிக்கும் பணி கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே அவர்களிடம் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது எங்களுக்கு பிள்ளையார்பட்டியில் உள்ள குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் பொருட்களை அங்கே மாற்றுவதற்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என்றனர். அதற்காக வீடுகள் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் வீடுகளை மக்கள் தாங்களாகவே காலி செய்தனர். கதவு, ஜன்னல்களையும் பெயர்த்து எடுத்து சென்றனர்.இதையடுத்து வீடுகளை இடிக்கும் பணி மீண்டும் நேற்று முன்தினம் துவங்கியது. 2வது நாளாக நேற்றும் வீடுகள் இடிக்கும் பணி நடந்தது. மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் வீடுகள் இடிக்கும் பணி மும்முரமாக நடந்தது. கிழக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: