புளியங்குடி, பிப்.14: சேர்ந்தமரம் அருகே வீரசிகாமணி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான்(80). இவர் நேற்று காலை கீழவீரசிகாமணியில் உள்ள வயல்பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்குள்ள ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 80 அடி ஆழ தரைமட்ட கிணற்றில் அப்துல் ரகுமான் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நிலைய அலுவலர் பார்வதிநாதன் தலைமையில் ஏட்டுகள் சந்திரமோகன், கிருஷ்ணசாமி, வேல்சாமி, பிரதாப், கருப்பையா, சிவசண்முகம், கருப்பசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி, முதியவரை மீட்டனர். கிணற்றில் 4 அடி மட்டும் தண்ணீர் இருந்ததால் மூழ்காமல் முதியவர் உயிர் தப்பினார்.