விக்கிரவாண்டி, பிப். 14: விக்கிரவாண்டி தாலுகாவில் பிரதம மந்திரி விவசாயிகள் ஊக்க தொகை பயனாளிகள் அறிக்கை தயாரித்தல் குறித்த விஏஓக்கான ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். தலைமையிடத்து நில அளவையர் ரவி முன்னிலை வகித்தார். வருவாய் உதவி அலுவலர் தஸ்தகீர் வரவேற்றார். கூட்டத்தில், தாலுகாவில் உள்ள விவசாயிகள் பிரதம மந்திரி விவசாயிகள் ஊக்கத்தொகை திட்டத்தில் பயனாளிகள் குறித்த அறிக்கையை தயார் செய்தல் குறித்தும், துரித காலத்தில் முழு அறிக்கையை தயார் செய்து தருவது குறித்தும், விஏஓக்களுக்கு தாசில்தார் சுந்தர்ராஜன் விளக்கம் அளித்தார். வருவாய் ஆய்வாளர்கள் மூர்த்தி, விஜயன், மெகருனிஷா, தரணி, பாரதி மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.