×

1.94 லட்சம் மாணவிகளில் 10 பேர் தேர்வு * ஒருநாள் முழுவதும் கலெக்டரின் பணிகளை நேரில் பார்வையிட்டனர் * கலெக்டருடன் காரில் பயணம்: அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பு ‘என் கனவு’ எனும் தலைப்பில் பெற்ேறாருக்கு கடிதம்

திருவண்ணாமலை, பிப்.12: பெற்றோருக்கு தங்கள் கனவுகளை சிறந்த முறையில் கடிதமாக எழுதிய 10 மாணவிகள், திருவண்ணாமலை கலெக்டரின் ஒருநாள் பணியை நேரில் பார்வையிடும் வாய்ப்பை பெற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரித்துள்ள பெண் குழந்தை திருமணம், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடுதல், பெண்சிசு கருக்கொலை மற்றும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு போன்ற சமூக அநீதிக களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான பல்வேறு தொடர் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விளைவாக, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி திருவண்ணாமலை மாவட்டம் தேசிய விருதை பெற்றது.இந்நிலையில், பெண் குழந்தைகளின் நலனுக்கான நடவடிக்கையின் தொடர்ச்சியாக, சமீபத்தில் ‘என் கனவு’ எனும் தலைப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 1.94 மாணவிகள் தங்களுடைய பெற்றோருக்கு கடந்த டிசம்பர் 20ம் தேதி கடிதம் எழுதினர்.அதில், சிறந்த கடிதங்களை எழுதிய 10 மாணவிகள் தேர்வு செய்து, ஒரு நாள் முழுவதும் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் பணிகளை நேரில் பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்படும் என கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அறிவித்திருந்தார்.அதன்படி, சிறந்த கடிதங்களை எழுதி தேர்வான மாணவிகள் ஜவ்வாதுமலை கஸ்தூரிபா காந்தி உண்டு உறைவிடப்பள்ளி கே.ஜெயப்பிரியா, வேடியப்பனூர் அரசு பள்ளி வி.மணிமேகலை, வி.நம்பியந்தல் அரசு நடுநிலைப்பள்ளி சமீனா, எஸ்ஆர்ஜிடிஎஸ் பள்ளி தனுசுயா, வள்ளிவாகை அரசு பள்ளி எஸ்.அபி, சேத்துப்பட்டு புனித வளனார் பள்ளி பாத்திமாபீவி, செய்யாறு விஸ்டம் இசைவாணி, முத்தனூர் நடுநிலைப்பள்ளி மேகனா, திருவண்ணாமலை டேனிஷ்மிஷன் பிரியா, கீழ்பென்னாத்தூர் அரசு பள்ளி ராஜலட்சுமி ஆகியோர் நேற்று ஒரு நாள் கலெக்டரின் பணிகளை நேரில் பார்வையிட்டனர்.

அதன்படி, கலெக்டர் கந்தசாமியின் முகாம் அலுவலகத்துக்கு வந்த மாணவிகளை கலெக்டர் வரவேற்றார். அவரது முகாம் அலுவலகத்தில் நடைெபறும் அன்றாட அலுவல் பணிகளை மாணவிகள் பார்வையிட்டனர். மேலும், கலெக்டருடன் சிறிது நேரம் உரையாடினர். பின்னர், மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ள வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு, கலெக்டருடன் மாணவிகள் அனைவரும் சென்றனர். அங்கு, மாதிரி பள்ளியை குத்துவிளக்கேற்றி மாணவிகள் தொடங்கி வைத்தனர். அப்போது, மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வம், வட்டார கல்வி அலுவலர் பவானி, பள்ளி துணை ஆய்வாளர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதைத்தொடர்ந்து, கலெக்டருடன் அவரது காரில் மாணவிகள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். கலெக்டர் காரில் மாணவிகள் வந்து இறங்கியதை கண்ட பொதுமக்கள் வியப்படைந்தனர். அதைத்தொடர்ந்து, கலெக்டரின் அலுவலக அறைக்கு சென்று, அதிகாரிகளுடன் நடந்த ஆய்வுக்கூட்டத்தை பார்வையிட்டனர்.பின்னர், திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், கலெக்டருடன் மாணவிகளும் பங்கேற்றனர். பொதுமக்களிடம் கலெக்டர் குறைகளை கேட்டு தீர்வு காண்பதை மாணவிகள் ஆர்வமுடன் குறிப்பெடுத்துக்கொண்டனர்.பின்னர், கலெக்டரின் காரில் மீண்டும் அவரது முகாம் அலுவலகத்துக்கு திரும்பிய மாணவிகளுக்கு, கலெக்டரின் வீட்டில் மதிய உணவு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, டிஆர்ஓ உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பல்கேற்ற ஆய்வுக் கூட்டங்களையும் மாணவிகள் பார்வையிட்டனர்.நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிவரை மாணவிகள் அனைவரும், கலெக்டரின் பணிகளை நேரில் பார்க்கும் வாய்ப்பை பெற்றனர். இது குறித்து, மாணவிகள் கூறுகையில், கலெக்டர் அலுவலகத்தைம், கலெக்டரையும் தூரத்தில் இருந்து பார்ப்பதே எங்களுக்கு வியப்பாக இருக்கும். இப்போது, ஒரு நாள் முழுவதும் கலெக்டருடன் இருந்து பணிகளை பார்த்ததும், அவரது காரில் பயணம் செய்ததும் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு என்றனர்.மேலும், பெண்களின் நலனுக்காக எங்கள் வாழ்நாள் முழுவதும் பாடுபடவும், நன்றாக படித்து பெண் குழந்தைகளின் உயர்வுக்காக உழைக்கவும் இந்த நாளில் உறுதியேற்றதாக உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

Tags : collector ,Peters ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...