அரியலூர், பிப். 7: அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி வாகன டிரைவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், ஆயுதப்படை வளாகத்தில் நடந்தது.மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பெரியய்யா, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ்ராஜ், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சரணவபவன் ஆகியோர் பங்கேற்று பேசினர். அதில் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். வேகத்தடைகளில் வாகனத்தை மிக குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும். சிக்னல் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நான்கு சக்கர வாகனங்கள் இயக்கும்போது டிரைவர் உட்பட அனைவரும் சீட்பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும். ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் ஆட்களை ஏற்றக்கூடாது. மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. மேலும் வாகனங்களை கவனக்குறைவாக இயக்குவதால் ஏற்படும் விபத்து மற்றும் பாதுகாப்பு குறித்து செயல்விளக்க குறும்படமும் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்ட டிரைவர்கள், போலீசார் பங்கேற்றனர்.