தா.பேட்டை, ஜன.23: முசிறி கள்ளர் தெரு மாரியம்மன் கோயில் அருகே சேதமடைந்த நிலையில் உள்ள தாசில்தார் குடியிருப்பு கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முசிறி கள்ளர் தெரு மாரியம்மன் கோயில் அருகே முசிறி தாசில்தார் தங்குவதற்கான குடியிருப்பு கட்டிடம் அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு கட்டிடம் தற்போது சேதமடைந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் வகையில் அச்சுறுத்தி வருகிறது. இதனை இடித்து அகற்ற வேண்டுமென இப்பகுதி மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். முசிறி தாசில்தார் தங்கி பணிபுரிவதற்கு வசதியாக குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. காலப்போக்கில் இக்கட்டிடம் சேதமடைந்ததால் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் அருகே மாரியம்மன் கோயில் மற்றும் சிவன்கோயில் அமைந்துள்ளது. மேலும் வாரசந்தைக்கு வரும் மக்கள் இக்கட்டிடத்தின் அருகே உள்ள பகுதியை பயன்படுத்துகின்றனர். கட்டிடம் இடிந்து விழுந்தால் கட்டிடத்தின் அருகே நிழலுக்கும், மழைக்கும் ஒதுங்குவோர் உயிரிழக்க வாய்ப்புள்ளது. எனவே சேதமடைந்த இக்கட்டித்தை இடித்து விட்டு முசிறி தாசில்தார் முசிறியில் தங்கி பணியாற்றும் வகையில் புதிதாக குடியிருப்பு அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் திருச்சி கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.