மதுரை, ஜன.23: தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர் மாநாடு இன்றும் நாளையும் சென்னையில் நடக்கிறது. இதன் மூலம் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கான முதலீடுகள் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன. குறிப்பாக மதுரை ரிங்ரோட்டிலுள்ள ஐ.டி.பூங்கா வளர்ச்சி அடையுமா? காமராஜர் பல்கலை கழகம் அருகே வடபழஞ்சி 375 ஏக்கர் பரப்பில் உருவான ஐ.,டி. பூங்கா திறக்கப்பட்டு தொழில் நிறுவனங்களுக்கு வாசல் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஏனென்றால் 2010ல் இந்த இரு ஐ.டி. பூங்காக்களும் தடையில்லா மின்சாரம் உள்பட சிறப்பு பொருளாதார மண்டல வசதியுடன் உருவாக்கப்பட்டது. இதில் தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்தனர். அந்த நிறுவனங்களுக்கு 90 ஆண்டு குத்தகை அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் ரிங்ரோடு பூங்கா 27 ஏக்கர் பரப்புடையது. இங்கு கட்டமைப்பு வசதிகள் விரைவாக உருவாக்கப்பட்டு 2011 ஜனவரியில் திறக்கப்பட்டது. இதில் சில நிறுவனங்கள் மட்டும் தொழில் தொடங்கின. படித்த நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் மேலும் நிறுவனங்கள் தொழில் தொடங்காமல் பெரும்பகுதி காலியாக கிடக்கிறது.வடபழஞ்சி: இதேபோல் வடபழஞ்சியில் 375 ஏக்கர் வளாகத்தில் அரசு சார்பில் கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றி முடிக்கப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. இந்த பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, தொழில் முதலீட்டாளர்களை இழுக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் படித்த இளைஞர்கள் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்க முடியும் என்பதே அந்த திட்டங்களின் நோக்கமாக 9 ஆண்டுகளுக்கு முன் அரசு அறிவித்தது. அது நிறைவேறாமல் தேக்க நிலை நீடிக்கிறது.50 ஆயிரம் பேர்: சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, “மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து என்ஜினீயரிங், பாலிடெக்னிக் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அலைகிறார்கள். முதலீட்டாளர் மாநாடு மூலம் மதுரையில் இரு ஐ.டி.பூங்காக்களுக்கு விமோசனம் பிறந்தால் 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்” என்றனர்.
மதுரையில் 50,000 இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் அலுவலகங்கள் வெறிச்சோடின