சூலூர்,ஜன.23: சூலூர் திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் புதிய வாகன பதிவு பணி செய்த பெண் அதிகாரியால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.சூலூர் வட்டார போக்குவரத்துக்கழக அலுவலகம் காங்கியம் பாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு மோட்டார் வாகன ஆய்வாளராக சித்ரா பணியாற்றி வருகிறார். இங்கு லைசென்ஸ் புதிப்பித்தல், வாகனப்பதிவு, தரச்சான்று ஆய்வு போன்ற பணிகள் நடப்பது வழக்கம். ஊருக்கு வெளியில் திருச்சி மெயின்ரோட்டில் இப்பணிகள் நடப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று திடீரென சூலூர் ரங்கநாதபுரம் பகுதியில் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் புதிதாக பதிவு செய்ய வந்த, இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் பதிவு செய்வதற்கான ஆய்வுகள் நடந்தது. இதை சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அவசரகதியில் செய்து கொண்டிருந்தார். நிரந்தரமான பதிவு அலுவலகம் இருந்தும் அதை பயன்படுத்தாமல் தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் வைத்து ஒரு அதிகாரி பணி செய்வது ஏன் என தெரியவில்லை என வாகனங்களை கொண்டு வந்தவர்கள் புலம்பினர். மேலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ள பகுயில் புதிய வாகனம் பதிவு செய்வதற்காக சாலையின் இருபுறமும் கார்,பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.