×

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை: மாமனார், மாமியார் கைது

ஆவடி, ஜன. 23: ஆவடி அடுத்த வீராபுரம், ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் முருகன் (25),  ஷேர் ஆட்டோ டிரைவர். இவருக்கும், ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்த மாதவி (22) என்பவருக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.  திருமணத்திற்கு பிறகு, முருகன் தனது மனைவி மாதவியுடன் பெற்றோர், தம்பி, தங்கையுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார்.  முருகனின் பெற்றோர்களான அன்னியப்பன், தேனியம்மாள் மற்றும் சகோதர, சகோதரி ஆகியோர் கார்துடைக்க பயன்படுத்தும் துணிகளை சாலையோரம் விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் மாதவியையும் அந்த வேலையில் ஈடுபடுத்தி உள்ளனர்.    ஆனால், மாதவி குறைவான ஊதியத்தை ஈட்டி  வந்துள்ளார். மேலும், அவர் வேலை செய்யும் நேரத்தில் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.  இதை முருகன் மற்றும் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 18ம் தேதி மாதவி வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாதவி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து, மாதவியை  தற்கொலைக்கு தூண்டியதாக அவரது மாமனார் அன்னியப்பன் (45), மாமியார் தேனி அம்மாள் (40) ஆகியோரை நேற்று கைது செய்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக கணவர் முருகன், மைத்துனர் சூர்யா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். திருமணமாகி 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால்  திருவள்ளூர் சப்- கலெக்டர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : mother-in-law ,
× RELATED சொத்துக்காக மாமனார், கணவரை கொன்றதுடன்...