×

கணவர் பிரிந்த விரக்தியில் விபரீத முடிவு கிணற்றில் குதித்து தாய், மகள் தற்கொலை

பாப்பிரெட்டிப்பட்டி, ஜன.22: பொம்மிடி அருகே கிணற்றில் குதித்து தாய், மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பொம்மிடி அருகேயுள்ள சிக்கம்பட்டியை சேர்ந்தவர் சாலம்மா (58). இவரது மகள் ரோஜா (30). இவருக்கும் நல்லம்பள்ளி சிவாடி பகுதியை சேர்ந்த அர்ச்சுனன் (36) என்பவருக்கும், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.  அவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு மகாலட்சுமி 12, 10, 4 வயதுகளில் 3குழந்தைகள் உள்ளனர்.

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இருவரும் ஐந்து ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். தன்னுடைய 3 குழந்தைகளுடன் தாய் சாலம்மா வீட்டில் ரோஜா வசித்து வந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். அவருடன் இளையமகள் ஜெயலட்சுமியும் சென்றார். ஆனால் மதியமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சாலம்மா அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கிராமம் முழுவதும் மகளையும், பேத்தியையும் தேடி வந்தார்.

அப்போது குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் ரோஜாவின் சடலம் மிதப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற சாலம்மா மற்றும் உறவினர்கள் ரோஜா மற்றும் ஜெயலட்சுமி சடலமாக மிதப்பதை கண்டு கதறி அழுதனர். இச்சம்பவம் தொடர்பாக பொம்மிடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் இருவரது உடல்களையும் போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலம்மா மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தாய், மகள் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் கூறியதாவது; ஐந்து ஆண்டுக்கும் மேலாக கணவரை பிரிந்து தாய் சாலம்மா வீட்டில் தான் 3 குழந்தைகளுடன் ரோஜா வசிக்கிறார். கணவர் இல்லாத விரக்தி, போதிய வருமானம் இல்லாதது போன்றவற்றால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். மேலும் பித்து பிடித்ததுபோல் வீட்டில் இருந்துள்ளார். நேற்று காலை கடைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். அவரது பின்னாலேயே இளையமகளும் ஓடிசென்றுள்ளார். மீண்டும் அவர்கள் வீட்டுக்கு வரவில்லையே என்று தேடியபோது தான் கிணற்றில் குதித்து உயிரை விட்டுள்ளனர். தற்கொலைக்கு இது மட்டும் தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா? என்பது குறித்தும் விசாரிக்கிறோம். அவரின் மற்ற இரு குழந்தைகளும் பள்ளிக்கு சென்றதால் தப்பியிருக்கிறார்கள், என்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை