×

ஓசூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளை

ஓசூர், ஜன.22: ஓசூரில், பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முனீஸ்வரர் நகரில் வசித்து வருபவர் கண்ணன். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லதா. இவர், தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று வழக்கம்போல பணிக்கு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த 3 சவரன் தாலி செயின், 1 சவரன் கம்மல், 2 வெள்ளி விளக்குகள், 2 பித்தளை விளக்குகள், 4 ஆயிரம் ரொக்கப்பணம், 4 வாட்ச், மற்றும் ஆதார் கார்டு, ரேசன் கார்டு, ஏடிஎம் கார்டு உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர்.

நேற்று மதிய சாப்பாட்டுக்கு வீட்டிற்கு வந்த கண்ணன் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டோர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். அந்த பகுதியில் ஒரு வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் கொள்ளையர்கள் அந்த பகுதியில் சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை போலீசார் தேடிவருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் ஓசூர் முனீஸ்வரர் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : dressing room ,Hosur ,house ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு