ஆண்டிபட்டி, ஜன.22: ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜதானி கிராமப்பகுதியில் கிணற்று பாசனத்தின் மூலமாக மருத்துவகுணம் கொண்ட மணக்கும் மரிக்கொழுந்து அறுவடைக்காக காத்து நிற்கிறது. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி ஒன்றியம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இங்கு பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, கதிர், மேலமஞ்சி, கீழமஞ்சி, சித்தார்பட்டி, வண்டியூர், கணேசபுரம், ஜி.உசிலம்பட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 200 ஏக்கர் பரப்பளவில் மரிக்கொழுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக போதிய மழைப் பொழிவு இல்லை. இதனால் நீர் நிலைகள் வறண்டதால், கால்வாய் பாசனம் , கிணற்று பாசனம் முற்றிலும் குறைந்து விட்டது. இதில் கிணற்றுப் பாசனத்தில் விவசாயம் செய்பவர்கள், கிணறுகளில் உள்ள தண்ணீருக்கேற்றவாறு விவசாயம் செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு பருவமழை மற்றும் ஓகி புயலால் மழை பெய்தும் சில நீர் நிலைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரவில்லை. இதன் காரணத்தினால் சாகுபடி செய்த பயிர்களை காப்பாற்ற வேண்டி பல லட்ச ரூபாய் செலவு செய்து ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன் மூலமாக கிணற்று பாசனம் செய்து மரிக்கொழுந்து சாகுபடி செய்துள்ளனர். தற்போது விளைந்து அறுவடைக்காக காத்து நிற்கும் மரிக்கொழுந்தின் வாசனை அவ்வழி செல்பவர்களை மெய்மறக்கச் செய்கிறது.