×

திருச்சி மாவட்ட வாக்காளர்கள் இறுதிபட்டியல் 31ம்தேதி வெளியீடு

திருச்சி, ஜன.22: திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள் இறுதிப்பட்டியல் வருகிற 31ம்தேதி வெளியிடப்படும் என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணைய அறிவுரைப்படி 1.1.2019ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு தீவிர முறையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் முதலியவற்றுக்கான படிவங்கள் 1.9.2018 முதல் 31.10.2018 வரை பெறப்பட்டன. முன்பு அறிவித்த நீட்டித்த கால அட்டவணைப்படி இறுதி வாக்காளர் பட்டியல்கள் ஜன.21ம் தேதி வெளியிடப்பட்டிருக்க வேண்டும். பிழைகளற்ற வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் சேர்த்தல், நீக்கல் குறித்த தகவல்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்வதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் தொடர் நடவடிக்கையாக வாக்காளர் பட்டியல்களில் காணப்படும் தவறுகள், ஒன்றுபோலுள்ள பதிவுகள் ஆகியவற்றை கண்டறிந்து உரிய களவிசாரணை மேற்கொண்டு இரட்டைப்பதிவுகளை நீக்கி, இந்திய தேர்தல் ஆணையத்தில் ஈஆர்ஓ நெட் மென்பொருள் மூலம் அச்சிடும் பணியை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளுக்கு மேலும் சிறிது கால அவகாசம் தேவைப்படுவதால் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 31ம் தேதி வெளியிடப்படும் என திருச்சி கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

Tags : Trichy District ,
× RELATED திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில்...