×

பரமக்குடி,ராமநாதபுரம் பகுதியில் குடிநீருக்காக பல மணி நேரம் காத்திருப்பு

பரமக்குடி, ஜன.22: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஊராட்சியில் குடிநீருக்காக பெண்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் நடடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ‘பரமக்குடி தாலுகா நயினார்கோவில் ஊராட்சியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் மிகவும் பிரசித்தி பெற்ற நாகநாத சுவாமி கோயிலும் உள்ளதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு தேவையான குடிநீர் இல்லாமல் குடியிருப்பவர்கள் மற்றும் பக்தர்கள் பணம் கொடுத்து தாகம் தீர்த்து வருகின்றனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன் ஊராட்சியால் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அதன்பின் இதுவரை குடிநீர் சப்ளை செய்ய வில்லை. இதனால் ஆண்களும், பெண்களும் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் சென்று கூட்டு குடிநீர் குழாய்களில் வரும் தண்ணீரை பிடித்து தாகத்தை தீர்த்து வருகின்றனர்.

பெண்கள் நயினார்கோவிலில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சமத்துவபுரத்தின் அருகே உள்ள கூட்டு குடிநீர் குழாயின் வால்வில் இருந்து வரும் தண்ணிரை பிடிக்க இரவு பகல் பார்க்கமால் பல மணி நேரம் காத்திருந்து தண்ணீர் பிடித்து வருகின்றனர். ஊராட்சி மூலம் குடிநீர் கடந்த 6 மாதங்களாக 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் 1 மணி நேரம் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பற்றாக்குறையால், குடிக்க தண்ணீர் இல்லாமல் மற்ற வேலைகளை விட்டு விட்டு 3 கிலோ மீட்டர் நடந்து சென்று காவிரி கூட்டு குடிநீர் வால்வு தொட்டிகளில் விழும் தண்ணீரை பொதுமக்கள் பிடித்து வருகின்றனர்.

வேறுவழியின்றி வண்டியில் வரும் தண்ணீரை ரூ.6 முதல் ரூ.10 வரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். குடிநீருக்காக காத்திருப்பதால் குழந்தைகளை பள்ளிக்கு சரியான நேரத்தில் அனுப்ப முடியாமல், வேலைக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் கூட்டு குடிநீர் வால்வுகளில் கசியும் தண்ணீருக்கு பல மணி நேரம் காத்திருந்து 3 குடங்கள் மட்டுமே கிடைக்கிறது. ஊராட்சி நிர்வாகம் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடம் குடிநீர் ரூ.10  ராமநாதபுரம் மாவட்டம். அதனை செழுமையான மாவட்டமாக மாற்றுவதற்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த மாவட்டத்தில் குடிநீர் தேவையை போக்குவதற்கு உப்பு நீரை குடிநீராக்கும் திட்டம் நரிப்பையூர். குயவன்குடி போன்ற இடங்களில் செயல்படுத்தப்பட்டது. இருப்பினும் இதன் மூலம் கிடைத்த குடிநீர் தேவைக்கு போதுமானதாக இல்லை. கோடைகாலங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடுகிறது. கடலோரப்பகுதிகளில் கடல்நீர் ஊடுருவல் காரணமாக குடிநீர் உப்பு தன்மையாக
மாறிவிடுகிறது.

இந்நிலையில் இந்த மாவட்டத்தின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் விதமாக ரூ.617 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை கடந்த 2007 அப்போதைய திமுக அரசு தொடங்கி வைத்தது. இந்த திட்டம் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் வசித்து வரும் சுமார் 12 லட்சம் பயன்பெற்றனர். கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் ராமநாதபுரம், பரமக்குடி போன்று பகுதிகளில் இன்னும் தனியார் டேங்கர் லாரிகள் குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  குடம் ரூ 10க்கு விலைகொடுத்து வாங்கும் நிலை நகர்பகுதியில் இன்றும் தொடர்ந்து வருகிறது.  

ராமநாதபுரம்  சின்னகடை தெருவை சேர்ந்த கஸ்தூரி கூறுகையில், கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் காவிரி தண்ணீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த தண்ணீர் தற்போது குடிப்பதற்கு உகந்ததாக இருப்பதில்லை. பெரும்பாலும் குடிநீர் தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்படுவதில் வரும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு நல்லநீருடன் அசுத்த நீர் கலந்து வருகிறது. அதனால் விலை அதிகம் ஆனாலும் குடம் தண்ணீர் ரூ.10க்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம் என்றார்.


Tags : Ramanathapuram ,Paramakudi ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...