திருமங்கலம், ஜன.22: திருமங்கலம் அருகே சாலையை சீரமைக்க வேண்டும். குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமங்கலம் அருகேயுள்ள காமாட்சிபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது மீனாட்சிபுரம் கிராமம். திருமங்கலம்-விருதுநகர் நான்குவழிச்சாலையிலிருந்து சுமார் 3 கி.மீ துாரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை படுமோசமாக காணப்படுகிறது. இதனால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. இதேபோல் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் மீனாட்சிபுரம் கிராமம் இணைக்கப்பட்டாலும் இதுவரையில் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. மேலும் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் சரிவர இல்லை. சாலையை சீரமைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்படி பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இதனை தொடர்ந்து நேற்று மாலை மீனாட்சிபுரம் கிராம மக்கள் திரண்டு காலிக்குடங்களுடன் கிராமசாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து கிராமமக்கள் சாலைமறியலை கைவிட்டனர்.