பந்தலூர், ஜன.22 : பந்தலூர் அருகே அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் அனுப்பப்பட்ட நோட்டீஸ் மலையாளத்தில் எழுதப்பட்டிருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். பந்தலூர் அடுத்த சேரம்பாடியில் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் பலர் விவசாயக்கடன், நகை அடகு கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் பெற்றுள்ளனர்.தமிழக-கேரளா எல்லையில் கூட்டுறவு சங்கம் அமைந்துள்ளதால், இங்கு இரு மாநில ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கடன் பெற்றவர்களுக்கு தற்போது மலையாளத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மலையாளம் தெரியாத மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதுகுறித்து கடன் சங்க செயலாளர் நசீர்பாவிடம் கேட்டபோது, இருமாநில எல்லை பகுதி என்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக வாடிக்கையாளர்களுக்கு தெரிந்த மொழியில் தான் நோடீஸ் அனுப்பப்படும். ஆனால் தற்போது தவறுதலாக மலையாளம் தெரியாத வாடிக்கையாளர்களுக்கும் மலையாளத்தில் நேட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.