×

குஜிலியம்பாறை அருகே 8 நாட்களாக கிராமத்திற்கு குடிநீர் சப்ளை நிறுத்தம் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம் விரைவில் சாலை மறியல் போராட்டம்

குஜிலியம்பாறை, ஜன. 22: பாளையம் பேரூராட்சி வான்ராயன்பட்டியில் கடந்த 8 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பாளையம் பேரூராட்சி நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். எனவே கிராம மக்கள் சார்பில் விரைவில் சாலை மறியல் போரட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். பாளையம் பேரூராட்சி 3வது வார்டு வான்ராயன்பட்டியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இக்கிராம மக்களின் குடிநீர் வசதிக்காக, பாளையம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் போர்வெல் அமைத்து மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சியால் போர்வெல்லில் தண்ணீர் இன்றி வறண்டுவிட்டது. இதையடுத்து காவிரி குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 8 நாட்களாக காவிரி குடிநீர் சப்ளை செய்யவில்லை. இதனால் கடந்த 8 நாட்களாக அருகிலுள்ள விவசாய தோட்டங்களில் குடிநீருக்காக தேடி அலைகின்றனர். இது குறித்து கிராம மக்கள் சார்பில், பாளையம் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், குடிநீர் ஆப்பரேட்டர் பணிக்கு சரிவர வருவதில்லை. இதன் காரணமாக காவிரி குடிநீர் வரும் வேளைகளில் தெருக்குழாய்களில் குடிநீர் சப்ளை செய்ய முடியவில்லை. இக்கிராமத்தை கடந்து சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கு காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால் வான்ராயன்பட்டிக்கு மட்டும் காவிரி குடிநீர் கிடைக்காமல் உள்ளது. எனவே மின்மோட்டார் மூலம் மேல்நிலைத்தொட்டியில் காவிரி குடிநீரை ஏற்றி அதன் மூலம் குடிநீர் சப்ளை செய்தால் மட்டுமே இக்கிராம மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும்.

இது குறித்து பாளையம் பேரூராட்சி நிர்வாகத்த்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே வான்ராயன்பட்டிக்கு காவிரி குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் கிடைக்காத பட்சத்தில், கிராம மக்கள் சார்பில் பாளையம்-குஜிலியம்பாறை வழித்தடத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

Tags : administration ,Panchayat ,Gujiliyambara ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு