×

மேலகோதைநாச்சியார்புரத்தில்பயன்பாடின்றி பயமுறுத்தும் பயணிகள் நிழற்குடை - இடித்து அகற்ற கோரிக்கை

சிவகாசி, ஜன. 22: வெம்பக்கோட்டை அருகே, மேலகோதைநாச்சியார்புரம் கிராமத்தில் இடிந்த நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் பயணிகள் நிழற்குடையை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெம்பக்கோட்டை ஒன்றியத்தில், மேலகோதை நாச்சியார்புரம் கிராமம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பஸ்நிறுத்தத்தில், பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடை தற்போது இடிந்த நிலையில், பொதுமக்களின் பயன்பாடு இல்லாமல் உள்ளது. சிமெண்ட் பூச்சுக்கள் பெயர்ந்து, மேற்கூரை கான்கிரீட்டும்  இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை அகற்ற ஊராட்சி நிர்வாகத்தினரிடம்  கிராம மக்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதன் அருகே பஸ்சிற்கு நிற்கும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் எப்போதும் அச்சத்துடன் உள்ளனர். பயணிகள் நிழற்குடையில் முட்களை போட்டு மூடி வைத்துள்ளனர். மழை காலங்களில் பொதுமக்கள் ஒதுங்க நிழற்குடை இல்லை. பள்ளி மாணவ, மாணவியர் நனைந்தபடியே பஸ்சுக்காக காத்திருக்கும் அவலம் உ ள்ளது. இதன் அருகே தொடக்க பள்ளி, மற்றும் கோவில்கள் உள்ளன. இதனால், பஸ் நிறுத்தம் பகுதியில் எப்போதும் குழந்தைகள் நடமாடி வருகின்றனர். பயணிகள் நிழற்குடை இடிந்துவிழும் ஆபத்தான நிலையில் உள்ளதால் விபரீதம் ஏற்படும் முன், அதனை அகற்றிவிட்டு புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி