×

கொடைரோடு அருகே டாஸ்மாக் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு காவலாளிக்கு கொலை மிரட்டல்

செம்பட்டி, ஜன. 22: கொடைரோடு அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்களை அள்ளி சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொடைரோடு அருகே உள்ள மாலையகவுண்டன்பட்டி ரெயில்வே கேட் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாட்ராயன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள கட்டிடத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இந்த கடையில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர் ராஜலிங்கம் மற்றும் விற்பனையாளர் விவேகானந்தன் ஆகியோர் மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். அதன் பிறகு இரவு 10 மணிக்கு மேல் கடையை மூடிவிட்டு சென்றனர். நள்ளிரவு ஒரு காரில் 5 முகமூடி கொள்ளையர்கள் டாஸ்மாக் கடைக்கு வந்தனர். அங்கு தோட்டத்தின் காவலாளி வெள்ளிமலை எனபவர் இருந்தார். இவரை கத்தி, அரிவாள் காட்டி மிரட்டி கடை அருகே உட்காரவைத்துக் கொண்டனர்.

அந்த முகமூடி கும்பல் கட்டித்தின் கதவு பூட்டை உடைத்து, டாஸ்மாக் கடைக்குள் சென்று அங்கிருந்த 5 மதுபாட்டில் பெட்டிகளையும், பணம் ரூ.900யும் எடுத்துக் கொண்டு வெளியே வந்து, கடையின் முன்பு உட்கார்ந்து மது அருந்திவிட்டு, அதன் பிறகு 5 பெட்டிகளையும் உள்ளே இருந்த 240 மதுபாட்டில்கள் அள்ளிச் சென்றனர். காவலாளி வெள்ளிமலையை மிரட்டிய முகமூடி கொள்ளையர்கள் ஒரு காரில் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து காவலாளி வெள்ளிமலை அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். டாஸ்மாக் மேற்பார்வையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடை அருகே ஒரு தோட்டத்தில் இருந்த கதவு பூட்டை உடைத்து சென்றுள்ளதாக மற்றொரு விவசாயி புகார் கூறியுள்ளார். இதனால் கொடைரோடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : guards ,theft ,
× RELATED காவலாளியை சுட்டுக் கொன்ற வனத்துறையினர் 2 பேர் கைது