விருதுநகர், ஜன. 22: விருதுநகர் மாவடத்தில் பெற்றோரை இழந்த மற்றும் பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கிய, 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தொடர்ந்து கல்வி பயில நிதி உதவிக்கான ஆணையை கலெக்டர் சிவஞானம் நேற்று வழங்கினார். விருதுநகர் மாவட்டத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், உறவினர்களிடம் வளரும் குழந்தைகள், எய்ட்ஸ் மற்றும் உயிர்க்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், விபத்தினால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள் உள்ளிட்ட ஆதரவற்ற குழந்தைகளில் கல்வியில் சிறந்து விளங்கும் 18 வயதிற்குட்பட்டவர்கள், தொடர்ந்து கல்வி பயில மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில், மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இதன்படி மாவட்டத்தில் மாணவ, மாணவியர் 41 பேர், மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் பெற்று வருகின்றனர். இந்நிலையில், மேலும் 5 பேருக்கு இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவி பெறும் ஆணையை கலெக்டர் சிவஞானம் நேற்று வழங்கினார்.