ஜெயங்கொண்டம், ஜன.22: ஆண்டிமடம் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களிள் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் துவங்கப்பட்டது. முகாமினை ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் ராமகிருஷ்ணன் துவங்கி வைத்து கூறுகையில், உடலில் சிவந்த, வெளிர்ந்த, உணர்ச்சியற்ற தேமல் போன்ற நோய்க்கான அறிகுறிகள் காணப்பட்டால் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உடனே பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படும். இந்த மருத்துவ குழு அனைத்து கிராமங்களுக்கும் சென்று கணக்கெடுப்பு பணிக்கு வரும் பணியாளர்களிடம் தங்களின் முழு உடல் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். முகாமில் மருத்துவமல்லா வட்டார மேற்பார்வையாளர்(பொ) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.