×

கீழ்கதிர்பூர் - பெரும்பாக்கத்தில் சாலையின் நடுவே உள்ள மின்கம்பம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம், ஜன.22: காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்கதிர்பூர் கிராமத்தில்,  கீழ்கதிர்பூர்-பெரும்பாக்கம் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் இருந்து கீழ்கதிர்பூர், குண்டுகுளம் வழியாக கீழம்பி புறவழிச்சாலை வரை  சாலை அகலபடுத்தும் பணி ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்றது. இந்தச் சாலை வழியாக பெரும்பாக்கம், விஷார், நாட்டேரி உள்ளிட்ட கிராமங்களுக்கு தினந்தோறும் ஏராளமானோர் வந்துசெல்கின்றனர். குறிப்பாக இந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்தப் பகுதி வழியாகச் செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இந்தச் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது சாலையின் நடுவில் உள்ள மின் கம்பம் அகற்றப்படாமல் விடப்பட்டதால் அவ்வழியே செல்லும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் ஆபத்தான நிலையில் பயணம்  செய்கின்றனர். இரவு நேரங்களில் அப்பகுதியில் மின்விளக்கும் இல்லாத நிலையில் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் இப்பகுதியைக் கடந்து செல்கின்றனர். எனவே ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு,  சாலையின் நடுவில் இருக்கும் மின்கம்பத்தை ஓரமாக அமைத்திடவும், மின்விளக்கு பொருத்திடவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி