×

குழந்தை வரம் வேண்டி பௌர்ணமி பூஜை: கணவரை தாக்கி மனைவியிடம் நகை பறித்துக்கொண்டு ஓடியவருக்கு வலை

காஞ்சிபுரம், ஜன. 22:  மதுராந்தகம் வட்டம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்  (35). பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி ஜானகி (30). இந்தத்  தம்பதியினருக்கு  திருமணமாகி 3 வருடங்களாகிறது. இவர்களுக்கு குழந்தை  இல்லாத காரணத்தால் பல்வேறு சிகிச்சைகள் மற்றும் பூஜைகள் செய்து  வந்துள்ளனர். இந்நிலையில், காஞ்சிபுரம் அடுத்த தாமரைத்தாங்கல்  கிராமத்தை சேர்ந்த பாபு என்பவரின் தொடர்பு கிடைத்துள்ளது. இவர் பௌர்ணமி  பூஜை செய்தால் குழந்தை வரம் கிடைக்கும் எனக் கூறி நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் தாமரைத்தாங்கல் மனோ மோகன் அவென்யூ பகுதியில் உள்ள  பாதி கட்டி முடிக்கப்படாமல் உள்ள வீட்டிற்கு தம்பதியரை வரவழைத்துள்ளார்.  

அங்கு பூஜை செய்வதாகக் கூறிய பாபு, பிரபாகரன்  -  ஜானகி உடன் பூஜையில்  ஈடுபட்டுள்ளார்.  அப்போது கண்களை மூடிக்கொண்டு பூஜை செய்யுமாறு  கூறியுள்ளார். எனவே, தம்பதியினர் இருவரும் கண்களை மூடிக்கொண்டு பூஜை  செய்துள்ளனர். இந்தச் சூழலை பாபு தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, பிரபாகரனை   கல்லால் தாக்கிவிட்டு ஜானகியிடம் இருந்த 10 சவரன் நகையை பறித்துக்கொண்டு  தப்பி ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜானகி தெருவில் ஓடிவந்து  கத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்குவந்த   பொதுமக்கள் ஆறுதல்  கூறி காஞ்சிபுரம் தாலுகா போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.

 உடனடியாக  சம்பவ இடத்துக்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் முகத்தில் பலத்த  காயமடைந்த பிரபாகரனை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். அங்கு பிரபாகரனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்  சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டார். தாக்குதலுக்கு உள்ளான பிரபாகரன் மனைவி ஜானகி  அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்தை காஞ்சிபுரம் டிஎஸ்பி பாலசுப்ரமணியன்,  காஞ்சிபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் உள்ளிட்டோர் பார்வையிட்டு  தப்பி ஓடிய பாபுவை தேடி வருகின்றனர்.  குழந்தை இல்லாததை சாதகமாக்கி பூஜை  எனும் பெயரில் மேலும் பல இடங்களில் பாபு மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது.

Tags : Poornima Puja ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...