ஊத்துக்கோட்டை, ஜன.22: ஊத்துக்கோட்டை அருகே தொம்பரம்பேடு கிராமத்தில் தைபூச திருவிழா பால்குடம் ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். ஊத்துக்கோட்டை அருகே தொம்பரம்பேடு கிராமத்தில் மகா கால பைரவர் கோயில் உள்ளது. அதன் வளாகத்தில் வள்ளி - தேவசேனா - சமேத சுப்பிரமணியர் சுவாமி கோயில் உள்ளது. இங்கு தைபூசத்தை முன்னிட்டு நேற்று காலை கோயில் வளாகத்தில் உள்ள சோதர கணபதி, பைரவர் மற்றும் அஷ்ட பைரவர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் சுப்பிரமணியர் - வள்ளி - தேவசேனா ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பெருமாள் கோயில் வளாகத்தில் இருந்து ஆண்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பெண்கள் 108 பால் குடத்தை தலையில் சுமந்தும் ஊர்வலமாக வந்து சுப்பிரமணியசுவாமி - வள்ளி தேவசேனாவுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.