புதுச்சேரி, ஜன. 22: புதுவை முத்தியால்பேட்டை, மாணிக்க முதலியார் தோட்டத்தில் வசிப்பவர் பிரதீஷ் என்ற பிரகாஷ் (26). பிளம்பரான இவர் மீது ஆரோவில்லில் ஒரு கொலை வழக்கு உள்ளது. 19ம்தேதி இரவு அவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கும்பல் அவரை வெட்டி கொலை செய்தது.இதுகுறித்து முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். இதில், பிரதீசுக்கும், சாமிபிள்ளை தோட்டம் ராஜேஷ் தரப்புக்கும் இடையிலான போஸ்டர் ஒட்டும் தகராறு மட்டுமின்றி கரிநாளன்று ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவும் கொலை நடந்தது அம்பலமானது.இதையடுத்து 3 தனிப்படை குற்றவாளிகளை அடையாளம் கண்டு வலைவீசி தேடிய நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சாமிபிள்ளைதோட்டம், அணைக்கரை மேடு முரளி, குஞ்சுமணி மணிகண்டன், பாண்டியன், கிளியனூர் பிரதாப் மற்றும் விஜி ஆகியோரை போலீசார் நேற்று பள்ளித்தென்னல் அருகே அதிரடியாக கைது செய்தனர்.
கைதான குற்றவாளிகளிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கார், பைக், செல்போன், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இதில் முரளி மீது செயின்பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.