கரூர்,ஜன.22: பொங்கல் விடுமுறைக்கு பிறகு நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு அதிகளவு பொதுமக்கள் வராத காரணத்தினால் அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.கடந்த ஜனவரி 7ம்தேதி அன்று கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடை பெற்றது. இதனை தொடர்ந்து, கடந்த வாரம் 14ம்தேதி அன்று அரசு உள்ளுர் விடுமுறை அறிவித்தது. இதனால் அன்றைய நாள் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடை பெறவில்லை. தொடர்ந்து ஒரு வாரம் பொங்கல் விடுமுறை என்பதால் அரசு அலுவலகங்களும் செயல்பட வில்லை.
இரண்டு வாரங்களுக்கு பிறகு நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. பெரும்பாலான பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில், மிகவும் குறைவான பொதுமக்களே குறைதீர் நாள் கூட்டத்துக்கு வந்திருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.