குலசேகரம், ஜன.22: குமரி மாவட்டம் திருவட்டார், வண்டிதடம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் கடந்த 12 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தின் இந்தோ திபெத் படையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும் ஆதிரூபா என்ற மகளும் உள்ளனர். மணிகண்டன் தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் பணியிலிருந்தார். இந்த பகுதி மைனஸ் டிகிரிக்கு குறைவான வெப்பநிலை உள்ள பகுதி. இவர் கடந்த 18ம் தேதி பணியில் இருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்தார். இவரது உடலை அதே படை பிரிவை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் வீரர்கள் கேரளா நூறுநாடு பகுதியில் உள்ள இந்தோ திபெத் படை பிரிவின் 27வது பட்டாலியனுக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து நேற்று காலை துணை கமாண்டர் ஜெகதீஸ் தலைமையில் வீரர்கள் திருவட்டார் கொண்டு வந்தனர். அங்கு முழு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்ச்சியில் போலீசார், பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.