கோவை ஈஷா யோகா மையத்தில் நாட்டு மாடுகளுடன் பொங்கல் விழா

கோவை, ஜன.18: கோவை ஈஷா யோகா மையத்தில் 16 வகையான நாட்டு மாடுகளுடன் பொங்கல் விழா நடந்தது.ஈஷா யோகா மையம், தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் கோவை ஈஷா யோகா மையம் ஆதியோகி சிலை முன்பு பொங்கல் விழா நடந்தது. இதில் ஈஷா மாட்டு மனையில் வளர்க்கப்படும் காங்கயம், உம்பாளச்சேரி, ஆலம்பாடி, வெச்சூர், கிர், சாஹிவால், ஓங்கோல் உள்ளிட்ட 16 வகையான நாட்டு மாடுகள் காட்சிப்படுத்தப்பட்டன. சுற்று வட்டார கிராம மக்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஈஷா தன்னார்வலர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் மண் பானைகளில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

 விழாவில் தாராபுரத்தை சேர்ந்த கலைஞர்களின் பறையாட்டம் நடந்தது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் மாடுகளுக்கு வெல்லம், கரும்பு, தானியங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். தொடர்ந்து கோ பூஜை நடந்தது. ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவ, மாணவிகள் மற்றும் வெளிநாட்டு ஈஷா தன்னார்வலர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழா குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியதாவது: மகர சங்கராந்தி என்பது மிகவும் முக்கியமான நாள். இந்நாளில் சூரியனுக்கும் பூமிக்குமான தொடர்பில் ஒரு மாற்றம் நடக்கிறது. நம் உயிருக்கு மூலமான சக்தி என்றால் அது சூரிய சக்தி தான். பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் சூரிய சக்தியால் தான் இயங்குகின்றன. மகர சங்கராந்தி நாளில் இருந்து வெயில் சற்று அதிகரிக்க துவங்கும். அந்த வெயிலால் மக்கள் கொஞ்சம் கஷ்டப்படுகிறார்கள். இந்த கஷ்டம் வெயிலால் வரவில்லை. வெயிலால் மரம், செடி, கொடிகள் எல்லாம் வளர்கிறது. நிழல் இல்லாததால் தான் மக்கள் கஷ்டப்படுகின்றனர். அந்த கஷ்டத்தில் இருந்து விடுபட அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும். விவசாயம் செய்வதற்கு மண் வளமாக இருக்க வேண்டும். மண் வளமாக இருக்க வேண்டுமானால் நாட்டு மாடுகளும், மரங்களும் மிகவும் அவசியம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நம் நாட்டு மாடுகளை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை கட்டாயம் தடை செய்ய வேண்டும். இவ்வாறு ஜக்கி வாசுதேவ் கூறினார்.

Related Stories: