கொள்ளிடம்,ஜன.18: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாதிரவேளூர் பாலுரான்படுகை, பட்டியமேடு உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த விவசாய தொழிலாளார்கள் மற்றும் மாணவர்கள் கொள்ளிடம் அருகே புத்தூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இந்த வங்கி கணக்கில் அரசின் மானியம் மற்றும் பல்வேறு வகையான நிதி உதவிகளும், விவசாயிகளுக்கான மானிய உதவி தொகைகளும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் நிதி உதவிகளும் அவர்களின் வங்கிக் கணக்கில் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் வங்கிக்கு நேரில் சென்றோ அல்லது ஏ.டி.எம் மூலமாகவோ பணத்தை பெற்று கொள்கின்றனர். இந்நிலையில் புத்தூரில் உள்ள வங்கியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அவர்கள் வேலை செய்த ஊதியம் 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலமாக வேலையில் ஈடுபட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் வங்கிக்கு நேரில் சென்று ஊதியத்தை பெற்று வருவது வழக்கமான நடைமுறையாக பின்பற்றப்படுகிறது. இந்த கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்களின் ஊதியத்திலிருந்து அவர்களின் மகன் அல்லது மகள் வாங்கிய கல்விக்கடனை வங்கியாளர்கள் பிடித்தம் செய்துள்ளனர். வங்கிக்கு ஊதியத்தை பெற சென்ற பணியாளர்கள் பலர் ஊதியம் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துள்ளனர். ஊதியத்தை பெற வங்கிக்கு செல்லும் போது தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களின் அனுமதியின்றி, வங்கி ஊழியர்களே ரசீதை பூர்த்தி செய்து, கல்விக்கடனை கழித்து கொள்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் பலர் வேதனையில் உள்ளனர்.