வாழப்பாடி, ஜன.18: வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி வைகை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு சேலம் கே.பி.என் டிராவல்ஸ் நிறுவனர் கே.பி. நடராஜன் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். முதல்வர் அனுஷா வரவேற்று பேசினார். விழாவில் பள்ளியின் செயலாளர் முத்துசாமி பேசுகையில், ‘உழைப்பால் உயர்ந்தவரை, விழாவுக்கு சிறப்பு விருந்தினராக நம் பள்ளிக்கு அழைத்ததில் பெருமை கொள்கிறோம்,’ என்றார். விழாவையொட்டி மாணவ, மாணவிகள் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக சொற்பொழிவு, யோகா, வில்லுப்பாட்டு, பாடல்கள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மாணவர்கள் கயிற்றின் உதவியோடு வானில் யோகாசனம் செய்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளி நிர்வாகம், கூகுள் சுந்தர் பிச்சையின் வரலாறு, வேளாண்மையில் முன்னேற்றம் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, நாடகங்கள் நடத்தினர். இந்த விழாவில் பள்ளி நிர்வாகிகளின் குடும்பத்தினர், மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். துறை செயலாளர் முத்துராஜ் நன்றி கூறினார்.