பட்டுக்கோட்டை,ஜன.18: புனல்வாசல் புனித அந்தோணியார் ஆலய மைதானத்தில் அந்தோணியார் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஒரே இடத்தில் 500க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி பொங்கல் வைத்தனர்.
பட்டுக்கோட்டை அடுத்த புனல்வாசல் அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 77 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக புனித அந்தோணியார் பொங்கல் விழா, கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் நேற்று புனித அந்தோணியார் பொங்கல் விழா நடந்தது. கிறிஸ்தவ மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் 500க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி பொங்கலிட்டு அந்தோணியாரை வழிபட்டனர். பொங்கல் விழாவை தொடர்ந்து புனித சவேரியார் ஆலய பங்குத்தந்தை வின்சென்ட், உதவி பங்குத்தந்தை தோமினிக் சாமுவேல், அருட்தந்தையர் அல்போன்ஸ் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. இதில் 1,000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். பின்னர் சமீபத்தில் நடந்த கஜா புயல் நினைவாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக புனித அந்தோணியார் கோயில் மைதானத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.