சேதுபாவாசத்திரம், ஜன.18: நிலக்கடலை பயிரில் கூடுதல் மகசூல் பெற நுண்ணூட்டச்சத்து கரைசல் தெளிப்பதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வித்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் 1,500 ஏக்கருக்கு மேல் மார்கழி பட்ட நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அவை தற்போது வளர்ச்சி பருவம், விழுது இறங்கும் பருவம், காய் பிடிக்கும் பருவம் என பல்வேறு நிலைகளில் உள்ளது. இத்தருணத்தில் நுண்ணூட்டச்சத்து கரைசல் தெளிப்பது மிகவும் அவசியமாகும். நுண்ணூட்டச்சத்து கரைசல் தயாரிக்க ஒரு ஏக்கருக்கு தேவையான டிஏபி ஒரு கிலோ, அம்மோனியம் சல்பேட் 400 கிராம், பொட்டாஷ் ஒரு கிலோ, பிளானோபிக்ஸ் 125 மில்லி ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும். இவற்றில் டிஏபி உரத்தை (1 கிலோ) நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் முதல்நாளே ஊற வைக்க வேண்டும். மறுநாள் தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து கொண்டு அத்துடன் மேற்கண்ட பிற பொருட்களையும் (பிளானோபிக்ஸ் தவிர்த்து) கலந்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கலவையாக்கி ஒரு ஏக்கர் பரப்பில் மாலை வேளையில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். பிளானோபிக்ஸ் பயிர் ஊக்கி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தனியாக தெளிக்க வேண்டும்.