புதுக்கோட்டை, ஜன.18: புதுக்கோட்டை மாவட்டம் மங்கத்தேவன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 629 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் மாடு முட்டியதில் 5 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை (14ம் தேதி) தொடங்கி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள மங்கதேவன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்தார். இதில் முதலில் கோவில்காளை அவிழ்த்து விடப்பட்டது. மேலும் இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாடாக அவிழ்த்துவிடப்பட்டது. இதில் 629 காளைகள் பங்கேற்றது. காளைகளை அடக்க 173 மாடு பிடிவீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற காளைக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 4 பேர் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒருவரை மேல் சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக கிராமத்தினர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். குறிப்பாக வாடிவாசல் அமைப்பது, பேரிகார்டு கட்டுவது, காளைகள் பதிவு, மாடு பிடிவீரர்கள் பதிவு ஆகிய பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஜல்லிக்கட்டு திடலை பார்வையிட்ட வருவாய்துறையினர் நிகழ்ச்சி நடந்த அனுமதியளித்தனர்.