தர்மபுரி,ஜன.18: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூசத் தேர்த்திரு விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூசத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11 மணியளவில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி சிவசுப்ரமணியசுவாமி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிவசுப்ரமணியசுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. இன்று (18ம் தேதி) புலி வாகன உற்சவம், 19ம் தேதி பூத வாகன உற்சவம், 20ம் தேதி நாக வாகன உற்சவம் நடக்கிறது. 21ம் தேதி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு சாலை விநாயகர் கோயிலிலிருந்து பால்குடம் ஊர்வலம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம், இரவு 12 மணிக்கு பொன்மயில் வாகனத்தில் சுவாமி தம்பதி சமேதர் திருவீதி உலா நடக்கிறது. 22ம் தேதி மாலை 5 மணிக்கு விநாயகர் தேரோட்டம் மற்றும் யானை வாகன உற்சவம் நடக்கிறது.விழாவின் முக்கிய நாளான 23ம் தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பெண்கள் மட்டுமே வடம் பிடிக்கும் தேரோட்டமும், மாலை 4 மணிக்கு வாணவேடிக்கையுடன் வண்ண விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்ட மகாரத தேரோட்டமும் நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு பாரிமுனை நண்பர்கள், வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் விழாவும், மாலை 6 மணிக்கு ஏழைகள் அன்னதானக் கமிட்டி சார்பில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது. வரும் 24ம் தேதி வேடர்பறி குதிரை வாகன உற்சவமும், 25ம் தேதி கொடியிறக்கம் மற்றும் பூப்பல்லக்கு உற்சவமும், 26ம் தேதி சயன உற்சவமும் நடக்கிறது.