×

மயானத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

திருப்புத்தூர், ஜன.18: திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் கீழத்தெருவில் உள்ள மயானத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் கீழத்தெருவில் ஆதிதிராவிடர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 80 குடியிருப்புகள் உள்ளன. இந்த கீழத்தெருவின் அருகில் இவர்களுக்கான மயானம் உள்ளன. இந்த மயானத்தை இறந்தவர்களை புதைக்க மட்டும் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்த மயானம் செல்லும் பாதை மற்றும் மயானம் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் மண்டி உள்ளே செல்லமுடியாத நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மயானத்தை பார்வையிட்டு இதை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து திருக்கோஷ்டியூரை சேர்ந்த திமுக ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் கண்ணன் கூறுகையில், ‘‘இந்த மயானத்திற்கு செல்லும் பாதையில் ஊராட்சியின் மூலம் ஏற்கனவே சிமெண்ட் சாலை போடப்பட்டது. ஆனால் தற்போது அந்த பாதையில் கருவேல செடிகள் முளைத்தும், குப்பைகள் நிறைந்தும் உள்ளன. கடந்த இரண்டரை வருடமாக மயானம் முழுவதும் கருவை மண்டி கிடக்கிறது. அப்பகுதியில் திடீரென யாராவது இறந்தால் சம்பள ஆட்கள் விட்டு தேவையான இடத்தை சுத்தம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : cemetery ,
× RELATED வேஷ்டியை கழற்றி ரகளை அமமுக ஒன்றிய செயலர் கைது