×

குழாய் உடைந்து வீணாகும் காவிரி குடிநீர்

ராமநாதபுரம், ஜன. 18: மண்டபம் முகாமில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. மண்டபம் முகாம் பஸ் ஸ்டாப் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மாதத்திற்கு முன்பு காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்தது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மண்டபம் பேரூராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். பணியாளர்கள் காவிரி குடிநீர் குழாய் என்பதால் அதற்குரிய பணியாளர்கள்தான் சரிசெய்ய வேண்டும் என்று கூறி குழாய் உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபடவில்லை.இதனால் தினந்தோறும் காலை நேரத்தில் குடிநீர் வரும்போது உடைந்த பைப் வழியாக குடிநீர் வீணாகி வருகிறது. குடிநீர் வாரிய அதிகாரிகள் உடைந்த குழாயை முறையாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  இதுகுறித்து ஆட்டோ டிரைவர் செல்லம் கூறுகையில், ‘குழாய் சேதமடைந்ததால் தண்ணீர் பெருகி சாலையில் ஓடுகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தாலும் பணியாளர்கள் யாரும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. பல இடங்களில் குடிப்பதற்கு குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வரும் நிலையில் தினந்தோறும் சாலையில் வீணாகும் குடிநீரால் யாருக்கும் பயன் இல்லை. குடிநீர் வாரிய அதிகாரிகள் விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை