மதுரையில் போலி ஐஏஎஸ் அதிகாரி கைது

மதுரை, ஜன. 18: ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி ஏமாற்றிய நபர் மதுரையில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் என்ற ஊரைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் பாலகிருஷ்ணன் (32). அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த பச்சையப்பன் மகன் யுவராஜ் (22) சாப்பிடச்சென்றார். அப்போது அவர், தான் ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் என்றும், தான் 8 மாதங்களுக்கு முன்பு நடந்த ஐஏஎஸ். தேர்வில் வெற்றி பெற்றதாகவும், அது தொடர்பாக தினசரி நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியில் வந்த செய்திகளை வாட்ஸ்அப்பில் அனுப்பி நம்ப வைத்துள்ளார். மேலும், யுவராஜ், தனக்கு பல உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பழக்கம் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், பாலகிருஷ்ணன் தைப்பொங்கலுக்கு தனது சொந்த ஊரான மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா கட்ராம்பட்டிக்கு செல்வதாக கூறி கடந்த 13ம் தேதி வந்துள்ளார். இந்நிலையில், யுவராஜூம் கடந்த 15ம் தேதி பாலகிருஷ்ணனின் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவருக்கு அன்றிரவு ஊரில் நடந்த பாட்டு கச்சேரியில் ஊர்மக்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ேநற்று முன்தினம் யுவராஜை, பாலகிருஷ்ணன் அழைத்துக்கொண்டு மதுரை வந்துள்ளார். பின்னர் பாலகிருஷ்ணன், தனது மாமா சேதுராமன் மூலம் மதுரை, விருதுநகரில் உள்ள கல்லூரிகளில் யுவராஜ் “ஐஏஎஸ். தேர்வில் தேர்ச்சி பெறுவது” பற்றிய சொற்பொழிவாற்ற ஏற்பாடு செய்யும்படி கூறியுள்ளார். அதன்பேரில் விருதுநகரில் உள்ள ஒரு கல்லூரியில் 18ம் தேதி (இன்று) உரையாற்ற சேதுராமன் ஏற்பாடு செய்திருந்தார். பின்னர் பாலகிருஷ்ணனின் மாமா சேதுராமன் ஐஏஎஸ். தேர்வுக்கு பயிற்சி எடுத்துவரும் தனது மகனிடம் விசாரித்தார். அப்போது 2018ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் யுவராஜ் பெயர் இல்லை என்பது தெரியவந்தது.இது குறித்து பாலகிருஷ்ணனிடம் சேதுராமன் கூறினார். அப்போது தான், தான் ஏமாற்றப்பட்டதை பாலகிருஷ்ணன் உணர்ந்தார். இது குறித்து பாலகிருஷ்ணன், தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து, யுவராஜை கைது செய்தனர்.

Related Stories: