மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.12.20 கோடிக்கு “சரக்கு” விற்பனை

மதுரை, ஜன. 18: மதுரை மாவட்டத்தில் நகரில் (வடக்கு) 113 கடைகளும், புறநகரில் (தெற்கு) 141 கடைகளும் சேர்த்து மொத்தம் 254 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இக்கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கலுக்கு முன்தினமும், பொங்கல் அன்றும் சரக்குகள் விற்பனை “களை” கட்டியது. குடிமகன்கள் நீண்ட “கியூ” வரிசையில் நின்று சரக்குகளை வாங்கிச்சென்றனர்.நகரில் (வடக்கு) பொங்கலுக்கு முன்தினம் ரூ.2 கோடியே 23 லட்சத்து 87 ஆயிரத்து 165க்கும், பொங்கல் அன்று ரூ.3 கோடியே 18 லட்சத்து 16 ஆயிரத்து 905க்கும் சேர்த்து 2 நாட்களில் ரூ.5 கோடியே 42 லட்சத்து 70க்கு விற்பனையானது.இதேபோல் புறநகரில் (தெற்கு) பொங்கலுக்கு முன்தினம் ரூ.2 கோடியே 64 லட்சத்து 33 ஆயிரத்து 140க்கும், பொங்கல் அன்று ரூ.4 கோடியே 14 லட்சத்து 36 ஆயிரத்து 335க்கும் சேர்த்து 2 நாட்களில் ரூ.6 கோடியே 78 லட்சத்து 69 ஆயிரத்து 475க்கும் விற்பனையானது.

ஆக, மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் ரூ.12 கோடியே 20 லட்சத்து 73 ஆயிரத்து 545க்கு விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட பல கோடி விற்பனை அதிகமாகும்.இது குறித்து விற்பனையாளர்கள் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு முன்தினம் அதிகளவிலும், பொங்கல் அன்று வழக்கமான அளவிலும் விற்பனையாகும். இந்த ஆண்டு, பொங்கலுக்கு மறுநாள் (16ம் தேதி) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், குடிமகன்கள் முன்கூட்டியே பொங்கல் அன்று சரக்குகளை அதிகளவில் வாங்கினர். அதனால் பொங்கல் அன்று விற்பனை அதிகமாக இருந்தது” என்றனர்.

Related Stories: