செம்பட்டி, ஜன. 18: பழநி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக தினந்தோறும் நடந்து வந்து கொண்டிருக்கின்றனர். மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் செம்பட்டி, கன்னிவாடி, ஒட்டன்சத்திரம் வழியாக பழநி செல்வர்.இவ்வழித்தடங்களில் பாதயாத்திரை பக்தர்களுக்கு சாலையோரம் குடிநீர், தெருவிளக்கு, குளியல் அறை, கழிப்பறை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என புகார் எழுந்துள்ளது. குறிப்பாக கொடைரோடு அடுத்த நாகையகவுண்டன்பட்டியில் இருந்து சக்கையநாயக்கனூர் வரை உள்ள சாலைகள் ஒருபுறம் தோண்டப்பட்டு அதன் பணிகள் முடியாமல் உள்ளது. இதேபோல் செம்பட்டி- பழநி ரோடு எஸ். பாறைப்பட்டி அருகே சாலைப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடாமல் இருப்பதால் பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.