ஜோலார்பேட்டை, ஜன.18 ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலையில் காணும் பொங்கலையொட்டி, நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.மேலும் இங்குள்ள இயற்கை பூங்கா செயற்கை நீரூற்று, போட்ஹவுஸ், முருகன் கோயில், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று ரசித்து தங்களது உறவினர்களுடன் பேசி, செல்போனில் செல்பி எடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தி பகிர்ந்து கொண்டனர்.மேலும், மலைவாழ் மக்களின் பாரம்பரிய பொங்கல் விழாவை பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் நேற்று நிலாவூரில் கிராம மக்கள் அம்மன் கோயில் அருகே வைக்கும் காணும் பொங்கலை கண்டு மகிழ்ந்தனர். புங்கனூர் ஏரியில் தங்கள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் பொங்கல் விடுமுறையில் வந்துள்ளவர்கள் அதிகமாக ஏலகிரி மலையில் தற்போது குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் மலை சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏலகிரி மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாமதேவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.