×

மாடியில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் அண்ணன் உள்பட 3 பேருக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: தம்பி, நண்பர்களுக்கு வலை

ஆவடி, ஜன. 18:    ஆவடி பட்டாபிராம் அன்னம்பேடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (28). தனியார் நிறுவன டிரைவர். இவரது தம்பி செல்லக்குமார் (24). பெயிண்டர். நேற்று முன்தினம் இரவு பொங்கலை  முன்னிட்டு செல்லக்குமார் தனது நண்பர்கள் பன்னீர்செல்வம், அருண்பாபு, விஜயகண்ணன் மற்றும் சிலருடன் வீட்டுக்கு மது பாட்டில்களுடன் வந்துள்ளார். பின்னர் அனைவரும் வீட்டு மாடியில் மது அருந்தியுள்ளனர். இதனை அறிந்த சதீஷ்குமார் தனது உறவினர்கள் பிரேமா (50), கார்த்திக் (30) ஆகியோருடன் மாடிக்கு வந்து தம்பியான செல்வகுமாரை தட்டிக்கேட்டுள்ளனர்.  இதனையடுத்து செல்வகுமாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அவர்களுடன் செல்லகுமார், நண்பர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

பின்னர் செல்லக்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து சதீஷ்குமார் மற்றும் உறவினர்களை சரமாரியாக உருட்டுக்கட்டையால் அடித்துள்ளனர். மேலும், அவர்கள் வீட்டுக்கு வெளியே வந்து கற்களாலும் சதீஷ்குமார், உறவினர்கள்  மீது தாக்குதல் நடத்தினர். பின்னர், அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில், படுகாயம் அடைந்த சதீஷ்குமார், பிரேமா, கார்த்திக் மூவரும் பட்டாபிராம் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின்பேரில் பட்டாபிராம் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார்  வழக்குப்பதிவு செய்து, செல்லக்குமார் மற்றும் நண்பர்களை தேடி வருகின்றனர்.


Tags :
× RELATED அனைத்து நீர்த்தேக்கங்களிலும் இருப்பு...