காஞ்சிபுரம், ஜன.18: காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.தூசி பாலிடெக்னிக் கல்லூரியில்: நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவிற்கு கல்லூரி தலைவர் கே.ஆர்.ஆறுமுகம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பாலிடெக்னிக் மாணவ,மாணவியர் புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படையல் இட்டனர். நிகழ்ச்சியில் பாலிடக்னிக் கல்லூரி முதல்வரும், அன்னை இந்திரா தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளையின் துணைத் தலைவருமான சசிக்குமார் பொங்கலின் மகத்துவம் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இந்த விழாவில் பாலிடக்னிக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.சங்கரா கலை அறிவியல் கல்லூரியில்: காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கல்லூரித் தலைவர் குமாரகிருஷ்ணன், செயலாளர் ரிஷிகேஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் மாணவ, மாணவியர் புதுப்பானை வைத்து பொங்கல் வைத்தனர். சூரிய பகவானுக்கு படையலிட்டு பொங்கல் விழாவை கொண்டாடினர். விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் கிராமிய நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஆறுபடை வீடு கல்லூரியில்: காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் அமைந்திருக்கும் ஆறுபடை வீடு பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது .விழாவிற்கு விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் கணேசன் மற்றும் இயக்குநர் அனுராதா கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.இந்தப் பொங்கல் விழாவில் தமிழ் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கும்மி, பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் மற்றும் தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தமிழர்களால் வழிவழியாக விளையாடப்பட்டு வந்த விளையாட்டுகளான கயிறு இழுத்தல், உறியடித்தல், கோலம் போடுதல், பம்பரம் விடுதல், பானை செய்தல் போன்ற போட்டிகளும் நடத்தப் பட்டது. கிராமிய மணம் சூழ நடத்தப்பட்ட இவ்விழாவில் வெளிநாட்டு விருந்தினர்களும் கலந்து கொண்டு ஆடிப் பாடி மகிழ்ந்தனர். விழாவில் கல்லூரியின் முதல்வர் சங்கர், நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாசன், முனைவர் பொன்னவைக்கோ, சத்யமூர்த்தி, ஷண்முகவல்லி, பேராசிரியர்கள் உமா சக்ரவர்த்தி, விஜயேந்திர பாபு மற்றும் பாலகணபதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விழா ஏற்பாடுகளை துணை முதல்வர் ராஜசேகரன்,பேராசிரியர்கள் சங்கீதா மற்றும் பிரபு, நிர்வாக துறையை சார்ந்த கருணாகரன் மற்றும் பத்மநாபன் செய்திருந்தனர்.
பூங்காவனம் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தில் : காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிபாக்கத்தில் உள்ள பூங்காவனம் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பசுமை பொங்கல் விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் முதன்மை மேலாளர் மோகனவேல், பள்ளி தலைமை ஆசிரியர் ஆடலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் சார் ஆட்சியர் சரவணன் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புத்தாடைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், ஆசிரியர் பயிற்றுநர் அருணா, ஒன்றிய மேலாளர்கள் கோவிந்தன், அன்பரசு, கீதா, நிஷ்யா, செல்வி, ஏழுமலை, திட்ட மேலாளர் சுந்தர், லோகநாதன், உதவி திட்ட மேலாளர்கள் நாகப்பன், ஜெகத்ரட்சகன், கனகவள்ளி, சாம்ராஜ், சிலம்பரசன், ராகவன், கலைக்குழு பயிற்றுநர் செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாணவர்களின் கலைநிகழச்சிகள் பொங்கலோ பொங்கல் நாடகங்கள் ஆகியவை நடைபெற்றது. மேலும் பசுமை பொங்கல் என்பதுற்கேற்ப கலந்துகொண்ட அனைவருக்கும் மா, பலா, தேக்கு, பூவரசன் , புங்கை மற்றும் நாவல் மரங்கல் வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தங்கமணி, மாணிக்கம், வீரராகவன், வெங்கடேசன், பார்த்திபன் ஆகியோர் செய்திருந்தனர். இதேபோன்று பாரதியார் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தில் பொங்கல் விழா மற்றும் உறியடி திருவிழா நடைபெற்றது.