குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்களை சரக்கு ஆட்டோவுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓட முயன்றபோது காயம் அடைந்த வாலிபர் மருத்துவமனையில் இருந்து தலைமறைவாகி விட்டார்.குன்றத்தூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் சாலையில் நந்தம்பாக்கம் அருகே குன்றத்தூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை போலீசார் மடக்கி விசாரித்த செய்தபோது, அதில் இருந்து வாலிபர் ஒருவர் இறங்கி ஓட முயன்றார்.அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த வழியே வந்த வாகனம் மோதியதில் அந்த வாலிபர் காயம் அடைந்தார். அந்த நபரை ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார், லோடு ஆட்டோவை சோதனையிட்டனர். அதில், தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது.