குன்றத்தூர் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்தி வந்த 600 கிலோ குட்கா பறிமுதல்: தப்ப முயன்று காயம் அடைந்தவர் மருத்துவமனையில் இருந்து ஓட்டம்

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்களை சரக்கு ஆட்டோவுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓட முயன்றபோது காயம் அடைந்த வாலிபர்  மருத்துவமனையில் இருந்து தலைமறைவாகி விட்டார்.குன்றத்தூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் சாலையில் நந்தம்பாக்கம் அருகே குன்றத்தூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை போலீசார் மடக்கி விசாரித்த  செய்தபோது, அதில் இருந்து வாலிபர் ஒருவர் இறங்கி ஓட முயன்றார்.அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த வழியே வந்த வாகனம் மோதியதில் அந்த வாலிபர் காயம் அடைந்தார். அந்த நபரை ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், ஆட்டோ டிரைவரிடம்  விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார், லோடு ஆட்டோவை சோதனையிட்டனர். அதில், தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா மூட்டைகளில் இருப்பது  தெரியவந்தது.

இதையடுத்து, அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது, அவர் மணலியை சேர்ந்த சுரேஷ் (32) என்பதும், மணலியில் கன்டெய்னரில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்களை மொத்தமாக  வாங்கி வந்து, அதனை தனித்தனியாகப் பிரித்து லோடு ஆட்டோக்களில் ஏற்றி சென்னை புறநகர் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. ஆட்டோவில் இருந்த 600 கிலோ குட்காவையும்  போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் சுரேசை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் காயம் அடைந்து மருத்துவமனைக்கு சென்ற மனோ (30) என்ற நபர் போலீசாருக்கு பயந்து மருத்துவமனையில் இருந்து  தப்பி ஓடி விட்டார். அந்த நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: