விவசாய மின் இணைப்புகளை விரைவாக சரி செய்யுங்கள் - மறுவாழ்வு திட்ட இயக்குனர் அறிவுரை

தஞ்சை, ஜன. 11: விவசாய மின் இணைப்புகளை விரைவாக சரி செய்யுமாறு மின்வாரிய அலுவலர்களுக்கு கஜா மறு சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு திட்ட இயக்குனர் ஜெகன்நாதன் அறிவுறுத்தினார்.பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கஜா மறு சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு திட்ட இயக்குனர் ஜெகன்நாதன் தலைமையில் வேளாண்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, கலெக்டர் அண்ணாதுரை, கஜா மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு கூடுதல் திட்ட இயக்குனர் ராஜகோபால் சுன்காரா முன்னிலையில்  கஜா புயல் நிவாரண பணிகளின் முன்னேற்றம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கஜா புயலால் வீடுகள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள நிவாரண உதவித்தொகை, 27 நிவாரண பொருட்கள் அடங்கியநிவாரண பெட்டகம் குறித்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் திட்ட இயக்குனர் ஜெகன்நாதன் கேட்டறிந்தார். பின்னர் நிவாரண உதவித்தொகை வங்கி கணக்கில் அனுப்பி வைக்கப்பட்டு மீண்டும் திரும்பிய விவரங்கள், அதற்கான காரணங்கள், அவற்றை மீண்டும் சரி செய்து பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினார். இதைதொடர்ந்து மீன்வளத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட மீனவ படகுகளின் சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு, பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு இதுவரை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ள நிவாரண உதவித்தொகை விவரங்களை கேட்டறிந்தார். ேமலும் மின்சார வாரியம் சார்பில் முடிக்கப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளின் விவரங்கள், தற்போது நடந்து வரும் விவசாய மின் இணைப்பு சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி உடனடியாக நிறைவு செய்வது குறித்து மின்வாரிய அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கஜா புயலால் சேதமடைந்த ஊரக தெருவிளக்குகள் சீரமைப்பு பணிகளின் விவரங்கள் மற்றும் முடிக்க வேண்டிய விவரங்கள் குறித்து திட்ட இயக்குனர் ஜெகன்நாதன் கேட்டறிந்தார். பின்னர் வேளாண்துறை மூலம் தென்னை பாதித்த விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள நிவாரண உதவித்தொகை, மேலும் அவர்களது வங்கி கணக்கில் விரைவாக நிவாரண உதவித்தொகையை வரவு வைக்கும் பணியில் வருவாய்த்துறையுடன் இணைந்து பணியாற்ற வேளாண்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.

டிஆர்ஓ சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், வேளாண்துறை இணை இயக்குனர் நெடுஞ்செழியன்மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: