அரசு நிவாரண பொருட்களை சேதப்படுத்திய 7 பேர் கைது

ஒரத்தநாடு, ஜன.11: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே அரசு நிவாரண பொருட்களை சேதப்படுத்திய 7 பேர் கைது  செய்யப்பட்டனர். மேலும் மாஜி பஞ்சாயத்து தலைவரை போலீசார் தேடி  வருகின்றனர்.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே புதூர் கிராமத்தில்  கிராம நிர்வாக அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும் சேவை மையத்தில் கஜா  புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக அரசு நிவாரண பொருட்கள்  பாதுகாப்பாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் நிவாரண பொருட்கள்  வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆங்காங்கே மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் பலத்த  போலீஸ் பாதுகாப்புடன் நிவாரணப் பொருட்கள்  வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நிவாரண பொருட்கள் வழங்குவதில்  தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7  மணியளவில் புதூர் முன்னாள் ஊராட்சி தலைவர் அன்பு காந்தி உள்ளிட்ட 8 பேர் வந்து  கிராம நிர்வாக அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும் சேவை மையத்தின் பூட்டை உடைத்து நிவாரண பொருட்களை சேதப்படுத்தியதாக  கூறப்படுகிறது. இதுகுறித்து விஏஓ ரமேஷ் அளித்த புகாரின்பேரில் ஒரத்தநாடு  போலீசார் வழக்குப்பதிந்து குமார், சதீஷ்குமார், ஆனந்தன், நாகரத்தினம்,  ராஜேஸ், ஸ்டாலின், கோதண்டராமன் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனர். மேலும் அன்பு காந்தியை தேடி வருகின்றனர்.

Related Stories: