×

பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சியில் 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் இன்றுமுதல் செயல்படும்

திருச்சி, ஜன. 11: வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள் இன்று முதல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பண்டிகை காலங்களில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க தஞ்சை மார்க்கம் மற்றும் மதுரை, புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பயணிகளுக்கு தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
இவ்வாண்டு வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று பொங்கலை கொண்டாட வசதியாக வரும் 14ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை தொடர் விடுமுறையாகும். பொதுமக்கள் முன்கூட்டியே சொந்த ஊருக்கு செல்ல வசதியாகவும், மத்திய பஸ்நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் இன்று (11ம்தேதி) முதல் வருகிற 21ம் தேதி வரை தற்காலிக பஸ்நிலையங்கள் செயல்படும்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியிலிருந்து மதுரை மார்க்கமாக தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கும், புதுக்கோட்டை வழியாக காரைக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு என மன்னார்புரத்தில் 2 இடங்களிலும், அதேபோல் தஞ்சை மார்க்கமாக செல்லும் பயணிகளுக்கு சோனா மீனா தியேட்டர் அருகே ஒரு இடத்திலும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாநகராட்சி நிர்வாகமும், காவல் துறையும் இணைந்து இந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தென்மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்தில் இருந்து திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் பஸ்கள் மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கி ஏற்றி மன்னார்புரத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்ல வேண்டும். மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளின் வழித்தடத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. மத்திய பஸ்நிலையத்தில் இருந்து மன்னார்புரத்திற்கு தற்காலிக அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் நிழற்குடை, குடிநீர் வசதி, கழிப்பிட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கமிஷனர் எச்சரிக்கை
தேசிய நெடுஞ்சாலைகளில் எக்காரணத்தைக் கொண்டும் எவ்வித வாகனங்களையும் போக்குவரத்து இடையூறாக நிறுத்தக் கூடாது. பேருந்துகளை அதற்கென ஒதுக்கப்பட்ட நிறுத்தத்தில் மட்டும்  நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும். வேன், கார்கள், ஆட்டோக்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்த வேண்டும், வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலை ஆக்கிரமித்து வியாபாரம் செய்யக்கூடாது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தகவல் அளிக்க கட்டுப்பாட்டு அறை எண் 100 மற்றம் வாட்ஸ்அப் எண் 96262-73399 என்ற எண்ணில் தொடர்பு  கொண்டு தெரிவிக்கலாம்.

Tags : bus terminals ,places ,Puri ,
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!