தா.பேட்டை, ஜன.11: தா.பேட்டை பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் மண் திருடப்படுவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து முசிறி தாசில்தார் சுப்ரமணியன் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார். நேற்றுமுன்தினம் இரவு தேவானூர் அருகே ரோந்துசென்ற போது அப்பகுதியிலிருந்த குட்டையில் சிலர் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் டிராக்டரில் கிராவல் மண் திருடிக் கொண்டிருந்தனர். அவர்களை தாசில்தார் சுப்ரமணியன் அலுவலர்களுடன் சுற்றி வளைத்தார். அப்போது மர்ம நபர்கள் பொக்லைன் இயந்திரத்துடன் தப்பிச்சென்று விட்டனர். டிராக்டர் கிராவல் மண்ணுடன் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பிய பொக்லைன் இயந்திரம் குறித்து தா.பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குட்டையில் மண் திருடியது குறித்து வருவாய் துறையினர் மேலும் விசாரித்து வருகின்றனர்.